நெல்லை அருகே கார் கவிழ்ந்து 2 பேர் பலி

நெல்லை அருகே டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-28 22:15 GMT
நாங்குநேரி, 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து கடலூரை நோக்கி நேற்று இரவு ஒரு கார் புறப்பட்டது. காரில் 12 பேர் இருந்தனர். இரவு 9.30 மணி அளவில் கார் நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தது. நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே வந்தபோது, காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினர். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச் சென்று, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் களியக்காவிளையை சேர்ந்த ஜெபின் சாமுவேல் (வயது 30), மார்த்தாண்டத்தை சேர்ந்த மோசஸ் (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்