சாதிச்சான்றிதழ் வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் சாதிச்சான்றிதழ் வழங்க கோரி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-19 22:45 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மற்றும் நீலமங்கலம் பகுதியில் இந்து கல்லடி இனத்தை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு வரை இந்து கல்லடி என சாதிச்சான்றிதழ் அரசு மூலம் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வருவாய்த்துறை அதிகாரிகள் சாதிச்சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்து கல்லடி இனத்தை சேர்ந்தவர்கள் அரசின் நலத்திட்டங்கள், சலுகைகளை பெற முடியாமலும், பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க கோரி முதல்-அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இந்து கல்லடி இன மாணவர்கள் நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் தங்களது பெற்றோர்களுடன் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தரையில் அமர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, சாதிச் சான்றிதழ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்