துணை நடிகை சந்தியா கொலை: குப்பை கிடங்கில் தலை, உடலை தேடும் பணி கைவிடப்பட்டது குழந்தைகளிடம் விசாரிக்க முடிவு

பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் தலை, உடல் பாகங்கள் தேடும் பணியை நிறுத்தி தனிப்படை போலீசார், இது தொடர்பாக சந்தியாவின் குழந்தைகளிடம் விசாரிக்க தூத்துக்குடி செல்ல முடிவு செய்து உள்ளனர்.

Update: 2019-03-01 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 51). சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். இவருடைய மனைவி சந்தியா (35). துணை நடிகை.

நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவியை கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி கொலை செய்த பாலகிருஷ்ணன், அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டியில் வீசினார்.

இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சந்தியாவின் கை, கால்கள், இடுப்பில் இருந்து தொடை வரையிலான பாகங்கள் கிடைத்த நிலையில் அவரது தலை, மற்றொரு கை மற்றும் உடல் பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் உடல் பாகங் களை தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், பொக் லைன் எந்திரங்கள் உதவியுடன் போலீசார் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கில் சுமார் 25 அடிக்கு கீழ் சென்று தேடியும் சந்தியாவின் தலை மற்றும் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பெருங்குடி குப்பை கிடங்கில் நடைபெற்று வந்த தேடுதல் பணியை போலீசார் நிறுத்தினர். அத்துடன் குப்பைகளுக்கு மத்தியில் உள்ள உடல் பாகங்களை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் போலீசாருக்கு கிடைத்த சந்தியாவின் உடல் பாகங்கள் டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள சந்தியாவின் குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் குழந்தைகளை அழைத்து வர பாலகிருஷ்ணனின் பெற்றோர் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகள் மற்றும் பாலகிருஷ்ணனின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி செல்ல முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்