கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில்: 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2018-11-30 22:00 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. வனப்பகுதியில் காட்டுயானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேலும் மலைப்பாம்பு, ராஜ நாகம், கட்டு விரியன் என பல வகை பாம்புகளும் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பாம்புகள் அடிக்கடி தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணியில் ஒரு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பயத்தில் அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

தொடர்ந்து கீழ்நாடுகாணியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த பாம்பை பத்திரமாக விட்டனர்.

மேலும் செய்திகள்