கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

புதுவை கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-11-11 21:30 GMT

புதுச்சேரி,

புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் பலனாக வார இறுதி நாட்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு சுற்றுலா வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல் நேற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவை வந்தனர்.

தற்போது வங்ககடலில் உருவாகி உள்ள புயலின் காரணமாக புதுவையில் நேற்று மாலை இதமான குளிர்காற்று வீசியது. இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தலைமை செயலகத்திற்கு எதிரே கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மணல் மரப்பில் இறங்கி கடலில் தங்கள் கால்களை நனைத்து மகிழ்ந்தனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்த சிலர் கடலில் இறங்கி குளித்தனர். பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து மணலில் அமர்ந்து பொழுதை போக்கினர்.

இதேபோல் புதுவை சண்டே மார்க்கெட்டிலும் நேற்று மக்கள் கூட்டம் அலை மோதியது. புதுவையில் உள்ள பொதுமக்களும், புதுவைக்கு சுற்றுலா வந்தவர்களும் சண்டே மார்க்கெட்டிற்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். இங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்