வெள்ளிமலை வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் கணக்கெடுப்பில் தகவல்

வெள்ளிமலை வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2018-06-18 04:00 IST

கடமலைக்குண்டு,

கடமலை–மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கண்டமனூர், மேகமலை, வருசநாடு ஆகிய மூன்று வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது.

புலி, யானை, கரடி, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. கடந்த வாரம் வனப்பகுதியில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

இந்த பணிகளுக்காக 8 குழுக்கள் அமைக்கப்பட்டு வனப்பகுதியில் கால்தடம், எச்சம் ஆகியவற்றை வைத்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்தது. வனத்துறையினருடன் சேர்ந்து தன்னார்வலர்களும் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவாரம் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணிகள் நேற்று முடிவடைந்தது.

இதுகுறித்து மேகமலை வனச்சரகர் குமரேசன் கூறியதாவது:–

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகளின் கால் தடங்கள் அதிக அளவில் உள்ளது. தற்போது நடைபெற்ற கணக்கெடுப்பில் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட வனஉயிரின காப்பாளருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. தற்போது புலிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்