போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் அண்ணன், தம்பிகளுக்கு சிறை

போலீஸ்காரரை தாக்கிய அண்ணன், தம்பிகளுக்கு கடலூர் கோர்ட்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

Update: 2018-05-30 21:30 GMT

கடலூர்,

கடலூர் அருகே நடுவீரப்பட்டு வாண்டுராசன்குப்பத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மகன் காசிநாதன் (வயது 35). இவர் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 15.6.2016 அன்று காசிநாதன் வேலைக்கு புறப்பட்ட போது, ராதாகிருஷ்ணன் மகன்கள் தெய்வீகன் (32), புகழ்செல்வன் (30), தமிழ்ச்செல்வன் (28) ஆகிய 3 பேரும் அவரை வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது பற்றி காசிநாதன் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாஜிஸ்திரேட்டு 1–வது கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி கோபாலக்கண்ணன் தீர்ப்பு கூறினார். தனது தீர்ப்பில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தெய்வீகனுக்கு 6 மாதமும், புகழ்செல்வனுக்கு 3 மாதமும், தமிழ்ச்செல்வனுக்கு 3 மாதமும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் 3 பேருக்கும் சேர்த்து ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் அரசு வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்