குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல், துப்பாக்கி முனையில் 2 பேர் கைது

குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

Update: 2018-04-20 22:30 GMT
செங்குன்றம்,

குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு லாரியில் 300 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ஜெயராம் மேற்பார்வையில் மாதவரம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, பாஸ்கர், தலைமை காவலர்கள் சிவகுமார், கிருஷ்ணா, சுரேஷ், சிவா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு மாதவரம் மேம்பாலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தும்படி போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அந்த லாரி, நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார், அந்த லாரியை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

அந்த லாரியில் இருந்த 2 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை புரசைவாக்கம் வேளாளர் தெருவைச் சேர்ந்த முனைகுபே(வயது 45), குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த லாரி டிரைவர் இஷாத்அகமது(40) என்பது தெரிந்தது.

பின்னர் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 300 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குஜராத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான முனைகுபே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். சென்னை முழுவதும் புகையிலை பொருட்களை விற்கும் மொத்த வியாபாரி ஆவார்.

புகையிலை பொருட்கள் விற்க தமிழக அரசு தடைவிதித்ததை தொடர்ந்து, இனிமேல் புகையிலை பொருட்களை விற்கமாட்டேன் என கடந்த ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் எழுதி கொடுத்தார். அதன்பிறகு அவர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவில்லை என கூறப்பட்டது.

ஆனால் அவர், கடந்த 6 மாதங்களாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி லாரியில் கடத்தி வந்து சென்னையில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து உள்ளார். பின்னர் அங்கிருந்து மினி லாரிகள் மூலம் வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் உள்ள டீக்கடை, பெட்டி கடைகளுக்கு திருட்டுத்தனமாக வினியோகம் செய்து வந்துள்ளார் என்பது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்