காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-04-16 23:30 GMT
தென்காசி,

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நெல்லை மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். நகர தலைவர் அகமது ஷா வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் ஜான் ஜமால், அலி, அப்துல் ரகுமான், சித்திக் கோதர் மைதீன், மஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செங்கை ஆரிப், ம.ம.க செயலாளர் மீரான், மாவட்ட துணை தலைவர் முகம்மது யாக்கூப் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. முடிவில், மாவட்ட பொருளாளர் மியான் ஷா நன்றி கூறினார்.

இதேபோல் தென்காசி அருகே உள்ள வடகரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகரை நகர தலைவர் சேக் முகம்மது ஒலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, நகர துணை தலைவர் அன்சாரி, நகர செயலாளர் அப்துல் பாஸித் ஆகியோர் பேசினார்கள். இதில் இளைஞர்கள், வர்த்தகர்கள், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லையை அடுத்த பேட்டையில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் ஜெய்லானி, சென்னை மத்திய மாவட்ட செயலாளர் ராஜாமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் முஸ்தபா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செய லாளர் மைதீன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்