விபத்தால் தொடரும் உயிரிழப்புகளை தடுக்க தனியார் பஸ்களின் அசுர வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விபத்தால் தொடரும் உயிரிழப்புகளை தடுக்க தனியார் பஸ்களின் அசுர வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2018-04-16 22:00 GMT
திருப்பூர்,

பின்னலாடை தொழில் காரணமாக தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ளது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகிறார்கள். அதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் திருப்பூருக்கு தினமும் வந்து செல்கிறார்கள். இதுபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் திருப்பூர் மாநகரில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் தினமும் திருப்பூர் வந்து செல்கிறார்கள்.

இதற்காக பொதுமக்கள் அதிகம் நம்பி இருப்பது பஸ் போக்குவரத்தைத்தான். அரசு மற்றும் தனியார் பஸ்களில் காணப்படும் கூட்டமே தொழில் நகரை நோக்கி மக்கள் வந்து செல்வதற்கு சான்று. நேரம் என்பது திருப்பூர் மக்களுக்கு மிகவும் முக்கியம். பனியன் தொழில் நிறுவனங்கள் முதல் அரசு அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வது வரை உரிய நேரத்தில் செல்ல வேண்டும். இதற்காக கிடைத்த பஸ்களில் தொழிலாளர்கள் ஏறி திருப்பூர் வருகிறார்கள். அதிலும் குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடத்துக்கு செல்வதற்காக பொதுமக்கள் பெரும்பாலும் தனியார் பஸ்களில் பயணம் செய்வதையே அதிகம் விரும்புகிறார்கள்.

மக்களுக்கு உரிய நேரத்தில் சேவையை வழங்கி வருவது ஒருபுறம் இருந்தாலும், ரோட்டில் செல்பவர்களின் உயிர்களையும் காவு வாங்கி விடுகிறது. நிற்க முடியாத அளவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து, பயணிகள் விரும்பும் இடத்தில் இறக்கி, ஏற்றி விட்டு உரிய நேரத்துக்குள் தகுந்த இடத்தை அடைந்து விட வேண்டும். இதுவே சில தனியார் பஸ் ஓட்டுனர், நடத்துனர்களின் எண்ண ஓட்டம்.

அதிலும், கோவை, உடுமலை, தாராபுரம், ஈரோடு செல்லும் சில தனியார் பஸ்களின் வேகம் பஸ்சுக்குள் இருக்கும் பயணிகளை விட, ரோட்டில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் பதற வைத்து விடுகிறது. ஒவ்வொரு முறை செல்லும்போது அதிக பயணிகளுடன் சென்று வருமானம் பார்க்க நினைப்பவர்கள், தகுந்த நேரத்திலும் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதற்காக பயணிகளை பஸ்களில் ஏற்றுவதற்கு செலுத்தும் ஆர்வத்தை, பயணிகளை இறக்கி விடுவதில் காட்டுவதில்லை. பஸ் நிற்பதற்கு முன் பஸ்சுக்குள் இருக்கும் பயணிகள் கீழே குதித்து விட வேண்டும். உடனடியாக பஸ் அங்கிருந்து கிளம்ப வேண்டும். தனக்கு முன்னால் செல்லும் பஸ்சை முந்தி சென்று அதிக பயணிகளை ஏற்ற வேண்டும். இப்படித்தான் சில தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன.

பெண்கள், முதியவர்கள் பஸ் படிக்கட்டில் ஏறுவதற்குள் பஸ்சை இயக்குவதால் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதுதவிர பஸ் நிலையங்களில் இருந்து பஸ்சை யார் முதலில் எடுத்துச்செல்வது என்று ஓட்டுனர்களுடன் சண்டையிடுவதும், பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதும், போலீசார் சென்று சமாதானப்படுத்தும் சம்பவங்களும் தொடர்கிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக அசுர வேகத்தில் ரோட்டில் செல்லும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பையும் ஏற்படுவது தான் கொடுமையின் உச்சகட்டம்.

நேற்று முன்தினம் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்தில் அவினாசியில் இருந்து திருப்பூர் வழியாக விஜயாபுரம் செல்லும் தனியார் பஸ் அசுர வேகத்தில் வந்து மோதியதில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பாரதி(வயது 30) என்ற பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். பெண்ணின் தந்தை சின்னசுப்பையன் ஸ்கூட்டரை ஓட்ட, பின்னால் அமர்ந்து இருந்த பாரதி விபத்தில் சிக்கி இறந்தார். கண் முன்னே மகளை பறிகொடுத்த சின்னசுப்பையனும் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்ப தோஷம் நீங்க பரிகார பூஜை செய்வதற்காக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து தந்தையுடன் வந்த பாரதி, நொடிப்பொழுதில் மரணித்து விட்டார். மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேற கோவிலுக்கு வந்த வழியில் ஒருநொடியில் மரணத்தை சந்தித்துவிட்டார். அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ்சால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி அங்கிருந்த பொதுமக்கள் ஆவேசப்பட்டு, பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். பஸ்சின் ஓட்டுனர், நடத்துனர் அனுப்பர்பாளையம் போலீசில் சரண் அடைந்தாலும் கூட, பாரதியின் உயிரிழப்பு அவருடைய குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது. வேகத்தின் விளைவாக ஒருநொடியில் நிகழ்ந்த அகாலமரணம், காலத்துக்கும் நினைவில் அகலாமல் இருக்கிறது.

வருவாயை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களின் நலன் கருதி தனியார் பஸ்களை இயக்க வேண்டும். அசுர வேகம் தொடர்ந்து ஆபத்தை கொடுத்து வருவதால் தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும். 

மேலும் செய்திகள்