காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ம.தி.மு.க.- மக்கள் விடுதலை இயக்கத்தினர் சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சங்கராபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.-மக்கள் விடுதலை இயக்கத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-16 22:00 GMT
சங்கராபுரம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் சாலை மறியல், ரெயில் மறியல், முழுஅடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ம.தி.மு.க.-மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் ரவி தலைமையில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் சவுகத் அலி, மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகள் நிஷான், பேரரசு, சிவராஜ் உள்பட பலர் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், குணசேகரன், கலியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.-மக்கள் விடுதலை இயக்கத்தினர் 40 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்