கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை; தந்தை கைது

கள்ளக்காதலை மகள் கைவிட மறுத்ததால், ஆத்திரமடைந்த தந்தை மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-15 22:00 GMT
புதூர்,

ஒத்தக்கடை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அரும்பனூர் கிராமம். இந்த ஊரைச் சேந்தவர் கோபால் (வயது 51). இவருக்கு சுகன்யா (24) என்பவர் உள்பட 3 மகள்கள் உள்ளனர். மூத்த பெண்னான சுகன்யாவிற்கும், மேலூர் தெற்குத்தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருமணம் நடந்து 2½ வயதில் குழந்தை உள்ளது.

சரவணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், சுகன்யா அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று சுகன்யா விஷம் குடித்து தற்கொலை செய்ததாக, கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒத்தக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

மேலும் சுகன்யாவின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் தந்தை கோபால், மகளின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கோபாலை கைது செய்து மேல் விசாரணை நடத்தினர்.

அதில் கணவர் வெளிநாடு சென்ற நிலையில், மகளுக்கு வேறு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் அதை கண்டித்ததாகவும், ஆனால் தனது பேச்சை கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததால், ஆத்திரமடைந்து மகளை கழுத்தை நெரித்து, வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் கோபாலை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்