காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஓய்வு பெற்றவர்களும் பங்கேற்றனர்.

Update: 2018-04-15 23:00 GMT
திருச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என கோரி திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நல சங்கத்தை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மோகனரெங்கன் வரவேற்றார்.

மாநில நிர்வாகிகள் அழகர்சாமி, கணேசன், சுந்தர்ராஜன், மதிவாணன் உள்பட ஏராளமான கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிகள் மாநிலம் முழுவதும் இருந்து வந்து இதில் கலந்து கொண்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன், காவிரி பாசன விவசாயிகள் நல சங்க துணை தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பேசினார்கள். மாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் மாநில தலைவர் ராசமாணிக்கம் முடித்து வைத்தார். முடிவில் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்