இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

கோவையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Update: 2018-02-02 22:45 GMT
கோவை,

கோவையை சேர்ந்தவர் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் (வயது 38). இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவில் தனது வீட்டிற்கு செல்லும்போது மர்ம ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை கோவையில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்கள். மேலும் சந்தேகத்துக்குரிய நபர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு, விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சதாம் உசேன் (27), சுபேர் (33), முபாரக் (37), அபுதாகீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் கைதான நபர்களை போலீசார் காவலிலும் எடுத்து விசாரணை நடத்தினார் கள். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும் ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் சதாம் உசேன், அபுதாகீர் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்ததால், அவர்கள் சிறையை விட்டு வெளியே வந்தனர். சுபேர், முபாரக் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே இந்த கொலையில் 4 பேருக்குத்தான் தொடர்பு உள்ளதா?, வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென்று இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். இதைதொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொடுத்தனர்.

இந்த நிலையில், சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர்.குமார் மற்றும் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் சசிகுமார் கொலைக்கு சதாம் உசேன் (27), சுபேர் (33), முபாரக் (37), அபுதாகீர் ஆகிய 4 பேர்தான் காரணமா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? சசிகுமாரை கொலை செய்ததும் அவர்கள் எங்கு தலைமறைவாக இருந்தனர்? அவர்கள் 4 பேருக்கும் அடைக்கலம் கொடுத்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘சசிகுமார் கொலை வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதால், இந்த கொலையில் தொடர்பு உடையவர்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை. எனவே விரைவில் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைதாக வாய்ப்பு உள்ளது. விசாரணை நடத்த அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உள்ளதால், விரைவில் பல முக்கிய தகவல்கள் கிடைத்து விடும்’ என்றனர். 

மேலும் செய்திகள்