கோவிலில் கொள்ளை போன நகைகள் கிணற்றில் கிடப்பதாக அருள்வாக்கு கூறிய பக்தர்

ஓமலூர் அருகே கோவிலில் கொள்ளை போன நகைகள் கிணற்றில் கிடப்பதாக பக்தர் ஒருவர் அருள்வாக்கு கூறினார். இதையடுத்து அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை 4 மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-12-12 23:51 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி சட்டூர் கிராமத்தில் துர்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2-ந்தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.

மறுநாள் காலையில் ஊர்கவுண்டர் செல்வம் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் நடை திறந்தே கிடந்தது. பின்னர் பார்த்தபோது கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்க தாலி, சங்கிலி என 4½ பவுன் நகையும், வெள்ளி கவசம், வெள்ளி வேல் உள்பட 3 கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கரியாம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 60) என்ற பக்தர், துர்காளியம்மன் கோவிலுக்கு வந்து சாமியாடினார். பின்னர் அவர் அருள்வாக்கு கூறினார். அப்போது அவர், கோவிலில் கொள்ளை போன நகைகள் ஒரு விவசாய கிணற்றில் கிடப்பதாக தெரிவித்தார். மேலும் தேங்காயை வைத்தும் குறிபார்த்தார். அதன் பின்னரும் கோவில் நகைகள் அந்த கிணற்றில் கிடப்பதாக கூறினார்.

அந்த கிணறு கோவிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உடனே அந்த கிணற்றுக்கு பொதுமக்கள் திரண்டு சென்றனர். அந்த கிணறு சுமார் 60 அடி ஆழம் கொண்டது. அதில் 50 அடி தண்ணீர் கிடந்தது. எனவே தண்ணீரை வெளியேற்றினால் தான் நகைகள் கிடக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க முடியும் என அறிந்தனர். இதையடுத்து அங்கு 4 மின் மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணியளவில் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை பணி நடைபெற்றது. ஆனாலும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. இதை காண கிராமமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

இன்று காலையிலும் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடரும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்