வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திறமைசாலிகளுக்கு டிக்கெட் வழங்கப்படும்

வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் திறமைசாலிகளுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

Update: 2017-11-29 23:17 GMT

மைசூரு,

மைசூருவில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முதல்–மந்திரி சித்தராமையா மைசூருவுக்கு வந்தார். பின்னர் அவர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இரவு தங்கினார்.

நேற்று காலை சித்தராமையா தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களுக்கு வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கொடுக்கப்படுமா? என்று நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். இதுதொடர்பாக கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்படும். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திறமைசாலிகளுக்கே டிக்கெட் வழங்கப்படும்.

பா.ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி சி.எச்.விஜயசங்கர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம். அவருக்கு எங்கள் கட்சியில் நல்ல பெயர் உள்ளது. இதுதொடர்பாக அவரிடம் நான் இதுவரை நேரில் சந்தித்து பேசவில்லை. அவர் காங்கிரசில் இணைய முடிவு செய்தால், அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்