மாதவரத்தில் பா.ஜனதா பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

மாதவரத்தில் பா.ஜனதா பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-13 22:17 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது 43). இவர் பா.ஜனதாவில் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா அணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கபாலி, அசோக் என்பவர்களுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

கபாலி, அசோக்கும் பாலாஜியை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது சம்பந்தமாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபாலியை கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜி கடந்த வாரம் வீடு திரும்பினார். அன்றிலிருந்து அவருக்கு தலைவலி அதிகமானதாக தெரிகிறது. இந்த மனமுடைந்த பாலாஜி நேற்று நண்பகல் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து மாதவரம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்