சென்னையில் 358 கிலோ போதைப்பொருள் பறிமுதல் 2 பேர் கைது

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

Update: 2017-11-12 22:30 GMT

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள வீரன் அழகுமுத்து கோன் சிலை ரவுண்டானா சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையில் நடந்த இந்த சோதனையின்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கினார்கள். மோட்டார் சைக்கிளில் 2 பெரிய பைகள் இருந்தது. அதற்குள் தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி மோட்டார் சைக்கிளில் வந்த சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சீவிராமன் (வயது 62) என்பவரும், சூளைமேடு பெரியார்பாதையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (48) என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவலின்பேரில் கோடம்பாக்கம் தயாளன் தெருவில் உள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 358 கிலோ எடையுள்ள மாவா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1.30 லட்சமாகும். கைதானவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்