ஆனந்த சதுர்த்தி ஊர்வலத்தில் பர்தா அணிந்து துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர் கைது

ஆனந்த சதுர்த்தி ஊர்வலத்தின்போது பக்தர்கள் கூட்டத்தில் பர்தா அணிந்துக்கொண்டு துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-09-06 23:26 GMT

மும்பை,

மும்பை அண்டாப்ஹில் பகுதியில் நேற்றுமுன்தினம் ஆனந்த சதுர்த்தி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பக்தர்கள் கூட்டத்தில் பர்தா அணிந்தபடி ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதை போலீசார் கவனித்தனர். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் பர்தா அணிந்து செல்வது பெண் இல்லை என்பதை கண்டுபிடித்தனர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் பர்தா அணிந்து சென்றவரை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் பர்தாவை அகற்றி, அந்த நபரிடம் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில், அவர் ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், அவரது பெயர் யோகேஷ் பட்டோலி(வயது32) என்பது தெரியவந்தது. ஆனந்த சதுர்த்தி ஊர்வலத்தில் பர்தா அணிந்து துப்பாக்கியுடன் புகுந்து யாரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தார்? என்பதை கண்டறிய அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அண்டாப்ஹில்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்