சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த 81 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிறுமாத்தூர் கிராமத்தில் 250 குடும்பங்களை சேர்ந்த 1,500 பேர் வசித்து வருகின்றனர்.

Update: 2017-09-05 23:16 GMT
வாலாஜாபாத்,

இவர்களில் பெரும்பாலானோர் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா இன்றி அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மதனந்தபுரம் பழனியும், இந்த கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்தநிலையில் சிறுமாத்தூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதி உடைய 81 குடும்பங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டது. ரூ.3 கோடியே 29 லட்சத்து 5 ஆயிரத்து 687 மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

மேலும் கடந்த நிதியாண்டில் மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலுக்காக சிறப்பாக பணியாற்றிய 24 முகவர்களுக்கும் பரிசாக ரூ.27 ஆயிரத்துக்கான தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஏழுமலை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜமாணிக்கம், கிளை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்