கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

கரூர் அருகே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2017-08-08 23:00 GMT
கரூர்,

மதுரை அருகே கப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கியாஸ் சிலிண்டர் குடோனில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் கியாஸ் முகவர் நிறுவனத்திற்கு 450 சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சந்திரசேகர்(வயது 27) ஓட்டி வந்தார். அனைத்து சிலிண்டர்களிலும் கியாஸ் நிரப்பப்பட்டிருந்தன. லாரி நேற்று காலை 7.30 மணி அளவில் கரூர் அருகே புத்தாம்பூரில் மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சந்திரசேகர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். லாரியில் இருந்த சிலிண்டர்கள் உருண்டோடின.

இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து டிரைவரை உடனடியாக மீட்டனர். டிரைவருக்கு தலையில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. டிரைவரின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பப்பட்டிருந்ததால் வெடித்து விடும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜகோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மேலும் கியாஸ் சிலிண்டர்களை அடுக்கி வைத்து அதன்மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் சிலிண்டர்கள் வெடிக்காத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் கியாஸ் சிலிண்டர் நிறுவனத்தை சேர்ந்த வினியோகஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிலிண்டர்களை மாற்று லாரி மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் கவிழ்ந்த லாரி கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் லாரி டிரைவர் தலையில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்