எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு

நாகையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2017-08-08 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பாலையூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந் தேதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

விழா சிறப்பாக அமையும் வகையில் அரங்கு அமைத்தல், பார்வையாளர்களுக்கு இருக்கை வசதிகள், சாலை, குடிநீர், கழிவறை வசதிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்குரிய முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதையொட்டி தற்போது அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பணியினை தரமாகவும், விரைந்தும் முடிக்க சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், நாகை உதவி கலெக்டர் கண்ணன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் இளம்வழுதி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தங்க.கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்