மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே உள்ள மதுக்கடையை முற்றுகையிட்ட பெண்கள், அந்த மதுக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-11 23:00 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையின் பின்பகுதியில் ‘பார்’ செயல்படுகிறது. இந்த பகுதியில் உள்ள சாலை வழியாக வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு, குள்ளனூர், வெண்ணாம்பட்டி, தடங்கம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். எனவே இந்த சாலை காலை முதல் இரவு வரை எப்போதும் அதிக வாகன போக்குவரத்துடன் காணப்படும்.

தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வர தொடங்கினார்கள். இதனால் இந்த மதுக்கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கு மது வாங்குபவர்கள் அருகே உள்ள மைதானத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இந்த பகுதியை சுற்றி உள்ள ஏராளமான குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

தர்ணா போராட்டம்

சாலை போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் இந்த மதுக்கடை மூடப்படாமல் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடந்து வந்தது. இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் நேற்று இந்த மதுக்கடை முன்பு திரண்டனர். மதுக்கடையை முற்றுகையிட்ட அவர்கள் கடையை மூடக்கோரி அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் இந்த தர்ணா போராட்டம் நீடித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு நேரில் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் அந்த மதுக்கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் அப்போது வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று போலீஸ் அதிகாரிகள் அப்போது உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக மதுக்கடை நேற்று மூடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்