பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரெயில் பெட்டியில் தீ விபத்து

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள தானே ரெயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் மின்சார ரெயில் ஒன்று நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Update: 2017-06-07 23:00 GMT

தானே,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள தானே ரெயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் மின்சார ரெயில் ஒன்று நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாலை 4 மணியளவில் அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென குபுகுபுவென புகை கிளம்பியது.

சிறிது நேரத்தில் அந்த பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதை ரெயிலில் சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்த்தனர். இந்த தீ விபத்தில் மின்சார ரெயில் பெட்டியின் ஒரு பகுதி எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்