அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சரபோஜி அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சரபோஜி அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்

Update: 2017-01-04 23:00 GMT
தஞ்சாவூர்,

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சரபோஜி அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்குவதற்காக அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 165 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் தரமான உணவுகள் வழங்கப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. சுத்தமான குடிதண்ணிர் வழங்கப்படவில்லை. அறைகளுக்கு கதவுகள் இல்லை என்பன போன்ற அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வலியுறுத்தி தஞ்சை-வல்லம் நம்பர்-1 சாலையில் நேற்று விடுதி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க தலைவர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். இந்த மறியல் குறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தாசில்தார் குருமூர்த்தி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விடுதியில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்