பொன்னியின் செல்வன்-1 வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு - நடிகை சோபிதா நெகிழ்ச்சி பதிவு

'பொன்னியின் செல்வன்-1' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை சோபிதா பகிர்ந்துள்ளார்.

Update: 2024-10-01 15:47 GMT

சென்னை,

எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இந்த திரைப்படம் நேரடியாக வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.

இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 தேசிய விருதுகள் கிடைத்தன. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 7-வது முறையாக தேசிய விருது வென்றார்.

இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடிகை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 'பொன்னியின் செல்வன்-1' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலா நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சோபிதா, 'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பொன்னியின் செல்வன்-1' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி ஆகியோர் உள்ளனர். மேலும் அந்த பதிவில், "பொன்னியின் செல்வன்-1 வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவர்கள்தான் 'தி அவெஞ்சர்ஸ்'(The Avengers) என்று என்னுடைய குழந்தைகளிடம் கூறப்போகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்