பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர்கள்

நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோர் தங்களின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2024-09-12 14:16 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாக மலையாள நடிகர் பாபுராஜ் மீது துணை நடிகை, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். துணை நடிகை அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பெண் நடிகை அளித்த புகாரில் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களின் மீது பதியப்பட்டுள்ள பாலியல் வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் கேட்டு முகேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கேட்டு தான் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.கே.பிரகாஷூக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

இதேபோன்று நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோரும் தங்களின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்