இளையராஜா பயோபிக் பணியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்

இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

Update: 2024-08-11 09:41 GMT

சென்னை,

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம்தான் 'அன்னக்கிளி'.இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.இவரது 1,000-வது படம் இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை. இவர் 2010 ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018 ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது. ராக்கி, சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படங்கள் ஆகும். ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக்கினை எப்படி இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போது, நடிகர் தனுஷ் சேகர் கமூலா இயக்கும் குபேரன் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, ஆனந்த் எல்.ராய் இயக்கும் பாலிவுட் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இது முடிந்த பின், இளையராஜாவின் பயோபிக் கதையில் நடிப்பார் எனத் தெரிகிறது. அதற்குள், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்திற்கான கலை மற்றும் இசைப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பண்ணைபுரத்தில் இளையராஜாவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்காக 1950-களின் பண்ணைபுரத்தை செட் மூலம் அமைக்க அருண் மாதேஸ்வரன் முடிவு செய்துள்ளார். அதற்காக, மாதிரி கிராம வடிவமைப்பை உருவாக்கி இளையராஜாவிடம் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து வருகிறாராம். இருவரும் அடிக்கடி சந்தித்து படத்தில் என்னென்ன எப்படி இடம்பெற வேண்டும் என்பது குறித்து பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்