'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

ஆனந்த் இயக்கியுள்ள ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் நடிகர்களை சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Update: 2024-08-09 10:00 GMT

சென்னை,

ஹிப்ஹாப் ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆனந்த். இவர் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளராகவும் உருவெடுத்த நிலையில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான பாடல்களை தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளனர். இந்த படமானது, இளைய தலைமுறையினரின் நட்பை பற்றிய கருத்தை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு சுனில் காஷிப் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஏற்கனவே மிர்ச்சி சிவா, ஜெய் ஆகியோர் படம் தொடர்பாக பாசிட்டிவ்வான விமர்சன வீடியோவை வெளியிட்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை பார்த்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

"நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ள ஆனந்த் என்னுடன் ரெமோ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த இடத்திலிருந்து தற்போது ஒரு படத்தை இந்த அளவுக்கு இயக்கியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும் என்பது நான் எப்போதும் சொல்வது. அதுபோல நண்பர்கள் எல்லாரும் இணைந்து வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்பதை சொல்வது தான் இந்த படம். படத்தில் பல காட்சிகள் நம் வாழ்க்கையில் நடப்பதை தொடர்புபடுத்தும். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று பாராட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Tags:    

மேலும் செய்திகள்