பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகளில் இனி பாலியல் புகார்கள் எழுந்தால்,யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை,
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பள்ளி சிறுமிகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மணப்பாறையில் 4-ம் வகுப்பு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் ஆசிரியர்களே இருந்தாலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போலீசார் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்.
தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து உள்ளார். வருங்காலத்தில் இது போல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வி துறை மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.