கோவா மக்கள் கூறினார்கள், விலகி விட்டோம்; பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.


கோவா மக்கள் கூறினார்கள், விலகி விட்டோம்; பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
x

காங்கிரசை பலப்படுத்திய அனைத்து முக்கிய தலைவர்களும் வருகிற நாட்களில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என கோவா சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் லோபோ கூறியுள்ளார்.


பனாஜி,


கோவாவில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று கோவா முதல்-மந்திரியை நேரில் சென்று சந்தித்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.

அவர்களில் முன்னாள் முதல்-மந்திரி திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் தவிர, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோரும் கோவா முதல்-மந்திரியை சந்தித்தனர்.

இதன்பின்னர், காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்து விட்டோம். பிரதமர் மோடி மற்றும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கரங்களை வலுப்படுத்த போகிறோம் என கூறியுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை எதிர்கொள்வதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ள தருணத்தில், இந்நடவடிக்கையை அவர்கள் அதிரடியாக எடுத்து உள்ளனர்.

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்த காங்கிரசில் இருந்து இன்று 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இதனால், சட்டசபையில் காங்கிரசின் பலம் 2 ஆக குறைந்து உள்ளது.

சமீப நாட்களாக காங்கிரசில் இருந்து வெளியேறும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் காங்கிரசில் இருந்து விலகியதும் அவருக்கு அதரவாக முக்கிய பொறுப்புகளில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகினர்.

கடந்த 4-ந்தேதி குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வகேலா விலகினார். அதற்கு முன் கட்சியில் இருந்த ராஜீந்தர் பிரசாத் கடந்த 2-ந்தேதி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த பின்னர் கோவா சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான மைக்கேல் லோபோ செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரசை பலப்படுத்திய அனைத்து முக்கிய தலைவர்களும் வருகிற நாட்களில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு இடையே பெரிய வேற்றுமைகள் காணப்படுகின்றன. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். மக்களின் குரலை கேட்க வேண்டியவர்கள். கட்சியை விட்டு வெளியேறும்படி அவர்கள் எங்களிடம் கூறினார்கள். அதனால், நாங்கள் விலகி இருக்கிறோம் என பா.ஜ.க.வில் இணைந்த அவர் கூறியுள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றி பெறப்போவதில்லை என கோவா மக்கள் எங்களிடம் கூறினார்கள். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள தலைவர்கள் தங்களுக்குள்ளேயே மோதி கொண்டுள்ளனர் என மக்கள் எங்களிடம் கூறியுள்ளனர் என்றும் லோபோ கூறியுள்ளார்.


Next Story