தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..?


தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..?
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து, வெயில் வாட்டி வதைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இதனைத்தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

19 மாவட்டங்களில் கனமழை

அதன்படி, நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, இந்த பகுதிகளில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யக் கூடும். இதன் தொடர்ச்சியாக வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உள் தமிழக மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

27.09.2024 முதல் 30.09.2024 வரை: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story