பாகிஸ்தானில் இருந்து வெளியேற கோரிக்கை வைத்த வீரர்கள்.. எச்சரித்த இலங்கை அணி நிர்வாகம்

இலங்கை - பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து வெளியேற கோரிக்கை வைத்த வீரர்கள்.. எச்சரித்த இலங்கை அணி நிர்வாகம்
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதன் காரணமாக பதற்றமடைந்த சில இலங்கை வீரர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது.

இந்த பதற்றமான சூழலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் செனவிரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு பிரச்சினை குறித்து ஆலோசித்தார். அப்போது அவர் இலங்கை வீரர்களுக்கு அரசு விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மொசின் நக்வி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறார். இதனையடுத்து இலங்கை வீரர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என்று மொசின் நக்வி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்களது வீரர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பிற்கு உறுதியளித்தது. அத்துடன் தொடரில் இருந்து யாரும் பாதியில் வெளியேறக் கூடாது எனவும், விலகினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com