ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு செய்வது எப்படி?
சர்க்கரை நோயாளிகள், வயிற்றில் பூச்சி இருப்பவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பாகற்காய், வறுத்த வெந்தயப்பொடி, சின்னவெங்காயம், நல்லெண்ணெய், தக்காளி, புளி, உப்பு - தேவைக்கு, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள், தனியாத்தூள், சீரகம், தேங்காய்த்துருவல் ஆகியவை.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும்.
பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.
பின் சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.
பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும். சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு ரெடி.