விநாயகர் சதுர்த்தி வந்தாச்சு...எந்த விநாயகரை எப்படி வழிபடவேண்டும்?
முழுமுதற் கடவுளான விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். உள்ளன்போடு யார் அழைத்தாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவானவராகவும், சுலபமாக வழிபடும் தெய்வமாகவும் இருக்கிறார்.
வில்வமரம் விநாயகர்- தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் வில்வமர விநாயகரை சித்திரை நட்சத்திரத்தன்று வழிபட்டால் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.
அரசமர விநாயகர்- அரசமரத்தடியில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை பூச நட்சத்திர தினத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பண கஷ்டங்கள் நீங்கும். பயிர்விளைச்சல் அதிகரிக்கும் என நம்பிக்கை.
ஆலமர விநாயகர்- ஆலமரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை ஐந்து வகை சாதம் படையலிட்டு வழிபட வேண்டும். பிறகு அந்த சாதங்களை கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதனால் தீராத கடுமையான நோய்கள் குணமடையும் என்பது ஐதீகம்.
வேப்பமர விநாயகர்- வேப்பமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று ஐந்து வகை எண்ணெய் தீ தீபம் ஏற்றி வழிபட்டால் விருப்பத்துக்கு ஏற்ப நல்ல வாழ்க்கை துணை அமையும் என நம்பிக்கை.
மாமரத்து விநாயகர்- மாமரத்தடியில் இருக்கும் விநாயகரை கேட்டை நட்சத்திரத்தன்று விபூதி காப்பீட்டு வணங்கி பெண்களுக்கு ஏதாவது தானம் செய்தால் வியாபாரம் செழிப்படையும், எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.
புன்னைமர விநாயகர்- ஆயில்யம் நட்சத்திரத்தன்று புன்னைமர விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என நம்பிக்கை. ஏழை மற்றும் நோயாளிகளுக்கு தானம் செய்வதும் சிறந்தது.
மகிழமர விநாயகர்- மகிழமர விநாயகரை அனுஷம் நட்சத்திர தினத்தன்று வழிபட்டு மாம்பழச்சாறு அபிஷேகம் செய்தால் பில்லி-சூனியம், செய்வினை, திருஷ்டிகள் விலகும் என நம்பிக்கை.
வன்னிமர விநாயகர்- அவிட்டம் நட்சத்திரத்தினத்தன்று நெல் பொரியால் வன்னிமர விநாயகரை வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.