இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவராக பொறுப்பேற்கிறார் லினேஷ் சனத்குமார்


இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவராக பொறுப்பேற்கிறார் லினேஷ் சனத்குமார்
x
தினத்தந்தி 27 Sep 2024 3:22 PM GMT (Updated: 27 Sep 2024 4:25 PM GMT)

இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவராக லினேஷ் சனத்குமார் பொறுப்பேற்கிறார்.

சென்னை,

இந்துஸ்தான் வர்த்தக சபை (எச்.சி.சி.) 1945-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில், வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவினை சார்ந்த சுமார் 1,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளை தொடர்புகொள்வது, வணிகத்தை சுமுகமாக நடத்துவதை பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து மனுவாக அரசுகளிடம் வழங்குதல், அரசுகளின் கொள்கைகள், சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்துஸ்தான் வர்த்தக சபையின் 2024-25-ம் ஆண்டுக்கான தலைவராக லினேஷ் சனத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், வரும் திங்கட்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு பின்பு தலைவராக பொறுப்பேற்கிறார்.

லினேஷ் சனத்குமார் மராட்டிய மாநிலம் மும்பையில் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர். பழைய காகிதங்களை சேகரித்து, மறுசுழற்சி செய்வதற்காக காகித ஆலைகளுக்கு வினியோகிக்கும் தனது குடும்ப தொழிலில் 1989-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறார். 50 வருடங்களையும் கடந்து அந்த நிறுவனம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

இதேபோல மற்றொரு தலைவராக டி.ரமேஷ் துகர், துணை தலைவர்களாக பிரவீன்குமார் தாட்டியா, ரியாஸ் ரசாக், பொருளாளராக ஆர்.சுவாமிநாதன் ஆகியோரும் பொறுப்பேற்கிறார்கள். இதில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சிவ்தாஸ் மீனா, இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஸ்ரீவட்ஸ் ராம், இந்துஸ்தான் வர்த்தக சபையின் தற்போதைய தலைவர் விஜய் சோர்டியா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.


Next Story