

சென்னை,
பழம்பெரும் நடிகை துளசி, டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு நடிப்பை விட்டுவிட்டு, ஆன்மீகப் பாதையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புவதாக துளசி கூறி இருக்கிறார்.
சென்னையில் கடந்த 1967ஆம் ஆண்டு பிறந்த நடிகை துளசி தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 1973ஆம் ஆண்டு வெளியான அரங்கேற்றம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக துளசி நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் வெளியான நல்லவனுக்கு நல்லவன் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த துளசிக்கு, 2014ல் வெளியான பண்ணையாரும் பத்மினியும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அஜித்துடன் மங்காத்தா, விஜயுடன் சர்கார், விஷாலுடன் ஆம்பள, வீரமே வாகை சூடும், சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு, சபாநாயகன் என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அண்மையில் வெளியான ஆரோமலே படத்தில் நடித்திருந்தார்.