< Back
கிரிக்கெட்
ஹர்திக் பாண்ட்யா - நடிகை நடாசா பிரிவதாக அறிவிப்பு

image courtesy: instagram/hardikpandya93

கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யா - நடிகை நடாசா பிரிவதாக அறிவிப்பு

தினத்தந்தி
|
18 July 2024 4:32 PM GMT

ஹர்திக் பாண்ட்யா - நடிகை நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் தம்பதி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்களாகும். ஆனால், கடந்த சில வாரங்களாகவே இந்த ஜோடி பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பேற்ற நிலையில் கூட, நடாஷாவை ஒரு போட்டியில் கூட மைதானத்தில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில்தான் ஹர்திக் மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் 2020-ல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்ததன் மூலம், தம்பதியினர் பெற்றோரானார்கள். 2023-ம் ஆண்டு காதலர் தினத்தில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகின.

சமீபத்தில் நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பயோவிலிருந்து 'பாண்ட்யா' என்ற குடும்பப்பெயரை நீக்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் அவரது பிறந்தநாளின்போது கூட, ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் வெளியிடவில்லை. மகன் அகஸ்தியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து, ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதள கணக்கிலிருந்து நடாஷா நீக்கியுள்ளதாக தெரிகிறது.

இதுபோன்ற காரணங்களால்தான் அவர்கள் பிரிய உள்ளதாக பலரும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இவர்களின் சமீபத்திய சமூக ஊடக செயல்பாடுகள் ஹர்திக் - நடாஷாவின் விரிசலை காட்டுவதாக அமைந்தது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா - நடிகை நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பின், நானும் நடாஷாவும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இருவருமே இணைந்திருப்பதற்கான அனைத்து முயற்சிகளை செய்தோம். ஆனால் தற்போது இருவருக்குமே பிரிவதே சிறந்த முடிவு என்று புரிகிறது. எங்களோ இருவரும் இது கடினமான முடிவு தான். இந்த 4 ஆண்டுகளில் எங்கள் இடையில் இருந்த மகிழ்ச்சி, மரியாதை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் மகன் அகஸ்தியாவால் ஆசீர்வதிக்கப்பட்டோம். எங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக அகஸ்தியா இருப்பார். அவரின் மகிழ்ச்சிக்காக அனைத்தையும் நாங்கள் வழங்க உறுதியாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் எங்களின் தனியுரிமையை மதித்து, ஆதரவை அளிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதேபோல நடாசாவும் ஹர்திக் பாண்ட்யாவை பிரிவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்