< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால்... ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆவேசம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால்... ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆவேசம்

தினத்தந்தி
|
2 Jun 2024 4:07 AM GMT

மோடி 3-வது முறையாக பிரதமராக போவதில்லை, என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள் என சோம்நாத் பாரதி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 4-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி கூறும்போது, தேர்தலுக்கு ,பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் தவறென்று நிரூபிக்கப்படும் என்றார்.

பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

புதுடெல்லி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளராக சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடுகிறார். பன்சூரிக்கு இது முதல் தேர்தலாகும்.

2019-ம் ஆண்டில் அனைத்து 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த முறை குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெருமளவிலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும், சோம்நாத் பாரதி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட கூடிய இந்தியா கூட்டணியானது, இந்த முறை அனைத்து 7 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவித்து உள்ளார்.

என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். மோடி 3-வது முறையாக பிரதமராக போவதில்லை. பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் அதிக அளவில் வாக்களித்து உள்ளனர் என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்