< Back
உலக செய்திகள்
இந்தியாவில் உற்சாகமான பணிகளை செய்வோம் - மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க்
உலக செய்திகள்

'இந்தியாவில் உற்சாகமான பணிகளை செய்வோம்' - மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க்

தினத்தந்தி
|
8 Jun 2024 7:25 AM GMT

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் வரும் 9-ந்தேதி(நாளை) நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 3-வது முறை பிரதமராக பதவியேற்கப்போகும் மோடிக்கு, உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளை செய்வதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் 'ஸ்டார் லிங்' திட்டம் குறித்த அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வருகை தருவார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்