
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை

ஜோர்டானுக்கு விசிட்டர் விசாவில் சென்ற இந்தியர் அங்கிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்றதாக சொல்லப்படுகிறது.
ஜெருசலேம்,
இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜோர்டானிய வீரர்களால் இஸ்ரேல் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் கேரள மாநிலத்தை சேர்ந்த கேப்ரியல் பெரேரா (வயது 47) என்பவர் ஆவார்.
கேரளாவின் தும்பா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை மீட்டு, கேரளாவிற்கு கொண்டு வரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரான பெரேரா, ஜோர்டானுக்கு விசிட்டர் விசாவில் வந்துள்ளார். பின்னர் ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போதுதான், ஜோர்டானிய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெரேராவின் உறவினர் எடிசனும் அவருடன் சேர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்று இருக்கிறார். எனினும், இவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயத்துடன் உயிர் தப்பினார். சிகிச்சைக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு மேற்கு கரையில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் - இஸ்ரேல் எல்லை மிகவும் பதற்றமாக உள்ளது. இத்தகைய சூழலில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.