< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பான்: கடலில் விழுந்த ஹெலிகாப்டர்கள் 18 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிப்பு
|21 July 2024 1:41 AM GMT
18 ஆயிரம் அடி ஆழத்தில் ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
டோக்கியோ,
ஜப்பானின் இசு தீவில் கடந்த ஏப்ரல் 21-ந்தேதி வழக்கமான ராணுவ பயிற்சி நடைபெற்றது. அப்போது நடுவானில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் 8 ராணுவ வீரர்களை சடலமாக மீட்டனர். எனினும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் மூலம் ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இதில் 20 ஆயிரம் அடி ஆழம் வரை ஆராயும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் சுமார் 18 ஆயிரம் அடி ஆழத்தில் ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை கைப்பற்றி ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும். எனவே ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை விரைவில் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.