
அமெரிக்கா: பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு நபர் தற்கொலை

அமெரிக்காவில் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கியால் மாணவ மாணவிகள் 2 பேரை சுட்டு விட்டு, தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டார்.
நாஷ்வில்லே,
அமெரிக்காவின் நாஷ்வில்லே நகரில் அமைந்த பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி நாஷ்வில்லே மெட்ரோ போலீசின் செய்தி தொடர்பாளர் வெதர்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, மர்ம நபர் துப்பாக்கியால் மாணவ மாணவிகள் 2 பேரை சுட்டு விட்டு, தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டார் என்றார்.
எனினும், மாணவர்களின் நிலை என்னவானது என்பது பற்றியோ அல்லது துப்பாக்கி சூடு நடத்தியது மாணவரா? என்பது பற்றியோ எந்தவித தகவலையும் வெதர்லி வெளியிடவில்லை. ஆனால், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட டொனால்டு டிரம்ப், அதன்பின் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையின்போது, நாட்டில் துப்பாக்கி கலாசாரத்திற்கு ஒரு முடிவு கட்டுவேன் என கூறினார். இந்நிலையில், பள்ளியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் மாணவி உயிரிழந்து உள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய நபரும் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு மாணவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.