
கிருஷ்ணகிரி
மதுபோதையில் நடந்த கொடூரம்... வாலிபருடன் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்றனர். அவர்கள் மலையின் உச்சிக்கு சென்ற போது அங்கு 4 இளைஞர்கள் மது போதையில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அந்த பெண்ணையும், உடன் வந்தவரையும் கத்தி முனையில் மிரட்டி 4 இளைஞர்களும், பெண் அணிந்திருந்த தங்க நகைகளை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்தனர்.
தொடர்ந்து 4 இளைஞர்களில், 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தை உடனிருந்த 2 பேர், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும், அந்த பெண்ணுடன் வந்தவரின் செல்போனை பறித்த கும்பல், அவரது ஜிபே செயலி மூலம் ரூ.7 ஆயிரம் பறித்துக் கொண்டனர். இந்நிலையில், மலையில் இருந்து கீழே இறங்கி வந்த ஆண் மற்றும் பெண் மிகவும் சோர்வாக அழுதபடி வந்தததை, கண்ட அங்கிருந்தவர்கள் விசாரித்த போது, மலையில் நடந்த சம்பவத்தை கூறினர். மேலும்,போலீஸில் புகார் அளிக்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை, தனிப்படை அமைத்து முழுமையாக விசாரணை நடத்தஉத்தரவிட்டார்.
போலீசாரின் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணும், நபரும், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று அந்த பெண்ணிடம் புகார் விவரத்தை போலீசார் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 21), அபிஷேக் (20) மற்றும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என்பது தெரியவந்தது.
இதில் கலையரசன், அபிஷேக் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர்கள் குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். இதனால் போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து சுரேசும், நாராயணனும் ஓட முயற்சி செய்யவே, சுரேசின் வலது காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சுருண்டு விழுந்தார். போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய நாராயணன் கீழே விழுந்ததில் அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது.
மேலும் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் குமார், விஜயகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்..
தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடத்தை எஸ்.பி. பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன், தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு ஏன்..?
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. தங்கதுரை, "கிருஷ்ணகிரி மலை பகுதியில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வந்திருந்தனர். அவர்களில் அந்த பெண்ணை 4 பேர் மிரட்டி நகை, பணத்தை பறித்தனர். இதில் 2 பேர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் அடையாளம் காணப்பட்டதில், நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று (நேற்று) பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுக்கியிருந்த 2 பேரை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கினர். அப்போது போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. கைதான சுரேஷ் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.