ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

கல்வித்துறையில் திராவிட மாடல் அரசு சாதனைகளை செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழா கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், 'அப்பா' என்ற புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
மத்திய அரசு 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்யவேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்பது, சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. ஆனால், எந்த மொழியை திணிக்க நினைத்தாலும், அந்தத் திணிப்பை எப்போதும் நாங்கள் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம்.
இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை; மாணவர்களை பள்ளிக் கூடங்களில் இருந்து விரட்டுகின்ற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகின்ற கொள்கை அது. மத்திய அரசின் கொள்கையான என்னென்ன பாதிப்பு வரும் என்பதை சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
· நாம் கடைபிடிக்கின்ற சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப் போக செய்வது.
· பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இப்போது உதவித் தொகை வழங்குகிறோம். இதை ஒன்றிய அரசின் திட்டம் மறுக்கின்றது.
· மூன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு - ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு - எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று வைத்து பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள்.
· ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வரப் போகிறார்கள். அதாவது ஆல் இண்டியா எக்ஸாம் போல நடக்கும்.
· உங்கள் மகனோ, மகளோ 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே போய் சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு வைப்பது போல, பொறியியல் படிப்புக்கும், ஆர்ட்ஸ் காலேஜ்க்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள். இதை அந்தக் கல்லூரி நடத்தாது. தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும். இதைவிட கொடுமை என்ன தெரியுமா?
· 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள் அவர்களாகவே வெளியேறலாம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன்… இப்படிச் சொல்வதே படிக்காமல் 'போ' என்று விரட்டுவதற்குச் சமமா? இல்லையா?
· 6-ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்கிற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். குலத்தொழில், ஜாதித் தொழில் என்று மனுநீதி சொல்கின்ற அநீதியாக தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துத்தான் தேசியக் கல்விக் கொள்கைய ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லுவோம்.
இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் 2000 கோடி ரூபாய் கிடைக்கும் - பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்திட மாட்டோம். இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்துக்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்திட்டால், என்ன ஆகும்? 2000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். இங்கே வந்திருக்கும் பெற்றோரை பார்த்து கேட்கிறேன். உங்கள் குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா? இல்லை, மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும், படிப்பு தடை படவேண்டுமா?
நாம் எந்த மொழிக்கும் எதிரியல்ல. இந்தி மொழியும் நமக்கு எதிரியல்ல. அதை யார் விரும்புகிறார்களோ அவர்கள் இந்தி பிரச்சார சபாவிற்கு சென்று அல்லது கேவி பள்ளியிலோ - இல்லை வேற வகையிலேயோ படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்ததில்லை. தடுக்கப் போவதுமில்லை. ஆனால், இந்தியை எங்கள் மேல் திணிக்க நினைக்காதீர்கள். திணிக்க நினைத்தால், தமிழர் என்றொரு இனம் உண்டு. தனியே அவருக்கொரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும்இருமொழிக் கொள்கையால், தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஒரு கருத்தை நேற்று பேசியிருக்கிறார். அவர் சொல்கிறார். "ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தைப் பின்னுக்குத் தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி"என்று சொல்கிறார். அவர் பழைய வரலாற்றை சொன்னாலும், அது தமிழ்நாட்டின் புதிய வரலாறாக, கொடிய வரலாறாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறோம். இன்று நேற்றல்ல, 85 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.