
ஆரியர் பற்றி நச்சு விதையை பரப்புகின்றனர்: கவர்னர் ஆர்.என்.ரவி

சிந்து சமவெளி நாகரிகம் எனச் சொல்லாமல் சிந்து-சரஸ்வதி நாகரிகம் எனக் கூற வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை,
சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் சிந்து நாகரிகம் குறித்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேதங்களின் மூலம் இந்த நாகரிகம் பெற்ற ஞானம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் மற்றும் அதன் கலாசாரத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும், படைப்பின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் தொடர்ந்து நம்மை ஈர்த்து, நமது தோற்றத்தை தனிப்பட்ட அளவிலும் உலகளவிலும் வரையறுத்து வருகின்றன.
ஆரிய படையெடுப்பு மற்றும் ஆரிய இனம் பற்றிய கோட்பாடுகளை பொய்யாகப் பரப்பிய மார்க்சிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்தங்களைத் தழுவியவர்கள் உள்பட ஐரோப்பிய காலனியவாதிகள், நீண்ட கால அறிவுசார் மற்றும் அரசியல் வன்முறை துணையுடன் மேற்கொள்ளும் வரலாற்றுத்திரிபுகள் மற்றும் தவறான உள்அர்த்தம் கற்பிக்கும் செயல்பாடுகளில் இருந்து இந்த நாகரிகத்தை பங்கேற்பாளர்கள் மீட்க வேண்டும்.
ஆரியர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நச்சு விதையை பரப்புகிறார்கள்; ஆரியர்கள் என்பவர்கள் ஆசிரியர் போன்று கற்பிப்பவர்கள்; தலைசிறந்தவர்கள் ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈவெரா; ஆரியர்கள் மிகவும் அறிவுப்பூர்வமானவர்களாக இருந்தார்கள்.
செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அணு இயற்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல், சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம் என்ற வரலாற்று உண்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ளது. நமது விரிவான தேசிய மறுமலர்ச்சி காலத்தில், சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும். சிந்து சமவெளி நாகரிகம் எனச் சொல்லாமல் சிந்து-சரஸ்வதி நதி நாகரிகம் எனக் கூற வேண்டும். சிந்து- சரஸ்வதி நதி நாகரிகம் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.