< Back
மாநில செய்திகள்
பெண்களை இளைஞர்கள் துரத்தி சென்ற விவகாரம்: டி.ஜி.பி. அலுவலகம் கொடுத்த விளக்கம் என்ன..?
மாநில செய்திகள்

பெண்களை இளைஞர்கள் துரத்தி சென்ற விவகாரம்: டி.ஜி.பி. அலுவலகம் கொடுத்த விளக்கம் என்ன..?

தினத்தந்தி
|
29 Jan 2025 6:57 PM IST

ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.

அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை தி.மு.க. கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசிச் சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர்கள் காரை நிறுத்தச் சொல்லியும் பெண்கள் சென்ற காரை நிறுத்தாமல் சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரைத் துரத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பெண்களை இளைஞர்கள் துரத்தி சென்ற விவகாரம் தொடர்பாக, டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று (29-01-2025) ஈசிஆர் ரோட்டில் ஒரு காரில் சென்ற பெண்களை வேறொரு காரில் சென்ற ஆண் நபர்கள் துரத்தி சென்று தொல்லை கொடுத்ததாக சில சேனல்களில் வந்த செய்திக்கு விளக்கம்.

கடந்த 28-01-2025 அன்று சின்னி திலங்க் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25-01-2025 அன்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் நான் (TN-13S-5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN 75.E-6004, TN-09-BR-9988) வந்த 7 - 8 நபர்கள் திடீரென வழி மறித்துள்ளனர்.

அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற சின்னி திலங்க என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்சனை செய்து அவர்களது காரை சின்னி திலங்க என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.

மேலும் மேற்படிகாரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக சின்னி திலங்க என்பவர் வந்த காரை துரத்தியதாகவும், அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாக கூறியதை சின்னி திலங்க தரப்பு மறுத்துள்ளது.

மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26-01-2025 வழங்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண் 16/2025 us 126(2) 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயனபடுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ECR சாலையில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்