
திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை - அண்ணாமலை

கோவையில் 17 வயது மாணவி 7 மாணவர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
கோவை உக்கடம் பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். அவரை காணவில்லை என அவரது பாட்டி போலீசில் புகார் அளித்த அடுத்த நாள் அந்த மாணவி பலவீனத்துடன் வீடு திரும்பியுள்ளார். மாணவியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தெரிந்த நண்பர்கள் அழைத்ததன் பெயரில் குனியமுத்தூர் பகுதிக்கு சென்றதாக கூறினார்.
அங்கு ஒரு பகுதியில் அறை எடுத்து தங்கிய மாணவியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. மாணவி வாக்குமூலம் அடிப்படையில் போக்சோ வழக்குப்பதிவு செய்த உக்கடம் பகுதி போலீசார், இதில் தொடர்புடைய 7 பேரையும் (கல்லூரி மாணவர்கள்) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
கோவையில், 17 வயது மாணவி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.
ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா? என பதிவிட்டுள்ளார்.