
வேலூர்
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வேலூர்,
'இலக்கு 2026' என்ற தலைப்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மத்திய அரசாங்கம் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது. தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க நிர்பந்தப்படுத்துவது சரியல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள்.
அ.தி.மு.க. யாரை நம்பியும் இருந்தது கிடையாது, மக்களை நம்பி இருக்கிறது. நாங்கள் யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும்.
சென்னை கோட்டைக்கு செல்வதற்காகவே வேலூர் கோட்டையில் திரண்டுள்ளோம். கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம்தான் இந்த மாநாடு. ஒரு கட்சி வலுவாக இருக்க இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும். இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி அ.தி.மு.க. அ.தி.மு.க. யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பியே உள்ளது.
தி.மு.க.வுக்கு கொள்கையும் கிடையாது, கூட்டணியும் கிடையாது. அடிக்கடி நிறம் மாறும் கட்சி தி.மு.க.. அ.தி.மு.க.வைப் பற்றி பேச முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை..
தமிழகத்தில் 2025 ஜனவரி முதல் பிப்ரவரி 14 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகள் தன்னை 'அப்பா அப்பா' என பாசத்தோடு அழைப்பதாக முதல்-அமைச்சர் கூறி வருகிறார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் 'அப்பா' என கதறுவது முதல்-அமைச்சருக்கு கேட்கவில்லையா..?
இவ்வாறு அவர் கூறினார்.