
கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: விளம்பர மோகத்தில் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கோவையில் 17 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
கோவையில் 17வயது மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்" என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?
தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு? பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
என பதிவிட்டுள்ளார்.